நாராயணா என்றுன் நாமமும் சொல்ல
நாவினி லமுதம் ஊறுதடா
ஆரா வமுதேயுன் அன்பு முகம்கண்டு
உள்ளத்தில் நம்பிக்கை கூடுதடா
முத்தமிழ் நாணும் மோகனச் சிரிப்பால்
வித்தகனே என்னை வென்றாய்
அத்தனே மண்ணை உண்டபின் வாயினுள்
உலகினைக் காட்டியே நின்றாய்
வேய்ங்குழல் இசையில் மயங்கியே நானும்
மாதவனே உனை நாடிடுவேன்
பங்கயம் போல்மென் பதநிழல் வேண்டியே
பாடலுன் மீது பாடிடுவேன்
சிந்தனை நிறைத்த சுகவா ரிதியே
சேவித்தேன் உந்தன் திருவடியே
எந்தையே அன்றுநீ அருளிய கீதை
எனைவழி நடத்தும் ஒருதுணையே
No comments:
Post a Comment