என்புருகி உன்னை அழைக்கும் பிள்ளைமுன்
அன்பால் நீதோன்றும் அந்நாளும் எந்நாளோ?
இன்பப்பெருக்கே இறையே அடியவன் எனது
துன்பம் தீர்க்கும் அந்நாளும் எந்நாளோ?
விடை ஏறினாய் மறைதேடும் விடையுமானாய்
சடையப்பனே உன்னை காணும்நாள் எந்நாளோ?
பித்தா அடியவர்க்கு பிரியமான பெருமானே
அத்தா உனைக்காணும் அந்நாளும் எந்நாளோ?
கருவறை சிறை ஒழித்து கனகசபை சேர்க்கின்ற
குருமொழியை கேட்கும் அந்நாளும் எந்நாளோ?
காயத்தின் மீதுள்ள காமம் கட்டறுந்து
நாயன் கடைத்தேறும் நன்னாள் எந்நாளோ?
மும்மலம் நீங்கி முழுவது முனதாகி
சும்மா இருக்கும்நாள் சிவனே எந்நாளோ?
தணியாத சம்சார வெந்தழல் தணித்திடும்
இணையடி நான்காணும் அந்நாளும் எந்நாளோ?
வஞ்சனை பொய்யென்று மண்டிய அழுக்கெலாம்
நெஞ்சினின்று நீங்கும் அந்நாளும் எந்நாளோ?
கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போலநீ
என்றனுக்கு இரங்கும் அந்நாளும் எந்நாளோ?
அன்னையிலாச் சேய்நான் இருவரோடு மூன்றாய்
என்னைஅர வணைக்கும் அந்நாளும் எந்நாளோ?
No comments:
Post a Comment