கார்த்திகை ஆரம் பத்தில் கழுத்திலே மாலை அணிந்தோம்
காலைமா லையிலே குளித்து கருத்தி லுன்னை வைத்தோம்
நேர்த்தியாய் நோன்பி ருந்தே நித்தமும் சரணம் சொன்னோம்
நாதனே எங்கள் நோன்பை நீஉடன் இருந்து முடிப்பாய்
இருமுடி கட்டி வந்தோம் இதயத்தை அதிலே வைத்தோம்
கரும்பென இனிக்கும் உந்தன் கழலிணை காண வந்தோம்
இரும்பினை கவர்ந்த காந்தம் இங்குநீ எனில்மிகை இல்லை
தரும சாஸ்தாவே உந்தன் தயைமழை நனைய வந்தோம்
பம்பையில் முழுகி வந்தோம் பாவங்கள் கழுவி வந்தோம்
எம்பெரு மானின் மகனே உன்னையே நாடி வந்தோம்
நம்பிவந் தவருக் கெல்லாம் நல்லருள் புரியும் தேவா
இம்பர்வாழ் வின்சுகம் யாவும் இறைவனே எமக்கு நீ தா
வேதவே தியர்கள் எல்லாம் விரும்பியே நாடும் சோதி
ஆதிநீ நடுவந்தமும் நீயே யாவுமே இங்குநீ தானே
ஏதும்வழி யில்லா துன்னை யான் சரண் அடைந்தேனே
தாயிலா சிறுவன் என்னை தாயென இருந்து காப்பாய்
பதினெட்டு படியின் அடியில் பக்தியுடன் வந்து நின்றோம்
இதுவரை நீயேஎமை காத்தாய் இனியுமே நீயே காப்பாய்
மதிசடை மகேசன் மகனே மலைவாழும் அரிகர சுதனே
கதிஎமக்கு நீயே அய்யா கைப்பிடித்து ஏற்றி விடுவாய்
No comments:
Post a Comment