Wednesday, May 21, 2014

Ramanuja - பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!

எல்லாம் வல்லவனும் உன்மீதே உறங்கிடுவான் 
அல்லவோ ? நீயவன்தன்  தாயோ? - அல்லல்படும் 
சிறியவனைக் காக்கநீ திருவுளம் கொள்வாயோ? 
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!

உன்பெயர் சொல்லா என்பாட்டும் ஒருபாட்டோ?
நின்னருளை பாடவே தமிழறிந்தேன் - எந்நாளும் 
தரித்திரம் நோய்நீங்க தரவேணும் அபயஹஸ்தம்
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே! 

அன்றும் இன்றும் உனையே நினைத்திருந்தேன் 
என்றுமுனை மறவேன் அருளாளா - கன்றுநான்
அரவணைக்கும் பசுவான என்னன்னை நீயே!
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே! 

அன்பருக்கு மட்டுமே உனதருள்  என்றாலென்
போன்றோர் எங்குதான் போவார்?- முன்னர்தன் 
உருவை தானுகந்தாய் இன்று எனைஉகப்பாய் 
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!

ஆறுதலை தரவேன் அழிச்சாட்டியம்? அருட்சொல் 
கூறுதலுக் குனையன்றி யாருளர்? - மாறுதலை 
விரும்பியே வினையறுக்கும் மலரடி பணிந்தேன் 
பெரும்புதூர் பெற்றெடுத்த மாணிக்கமே!

No comments:

Post a Comment