தாகமென்று வந்தவர்க்குத் தண்ணீரைத் தந்திடாது
ஆகமங்கள் படித்துவென்ன புண்ணியம்? நெஞ்சே
நீயுமிதை நினைத்துப்பாரடா!
சறுக்கி விழுந்தவர்களை தூக்கிநிறுத்த உதவாது
இருவிழிநீர் சிந்தியென்ன புண்ணியம்? நெஞ்சே
நீயுமிதை நினைத்துப்பாரடா!
தந்தைதாய்க்கு சேவைகள் செய்திடாது புறக்கணித்து
எந்தையைநீ நினைத்துவென்ன புண்ணியம்? நெஞ்சே
நீயுமிதை நினைத்துப்பாரடா!
கருணையோடு கூடவாழும் தீனருக் குதவிடாமல்
ப்ரவசனங்கள் கேட்டுவென்ன புண்ணியம்? நெஞ்சே
நீயுமிதை நினைத்துப்பாரடா!
வருத்தும்பசி போக்குமுணவு வழங்கிடாது தானதர்மம்
பெருமைக்காக செய்துவென்ன புண்ணியம்? நெஞ்சே
நீயுமிதை நினைத்துப்பாரடா!
புண்ணியதீர்த் தங்களாடி புறவழுக்கு நீங்கிமாசு
எண்ணத்திலே வைத்துவென்ன புண்ணியம்? நெஞ்சே
நீயுமிதை நினைத்துப்பாரடா!
தந்தைதாயின் திருவடியில் சொர்கமுண்டு நீயறிவாய்
வந்தனங்கள் செய்துவாழு நெஞ்சமே - நீ
பழியிலிருந்து மீளுகொஞ்சமே
No comments:
Post a Comment