Monday, March 31, 2014

Krishna - கண்ணன் வருகின்ற நேரம்

கண்ணன் வருகின்ற நேரம் - அவன்
குழலும் ஒலிக்கின்ற நேரம் - இனி
எண்ணம் அவன்மீது கூடும் - என்
இதயம் அவன்பெயரைப் பாடும்


நயனம் அவனழகைப் பருகும் - என்
நெஞ்சம் நெய்யாக உருகும் - அவன்
மயக்கும் தெய்வீக அழகில் - என்
மனதில் ஸ்ரீராகம் ஒலிக்கும்  -இந்த
கயிறு அரவாகும் பொழுதில் – அவன்
கண்கள் கவிதைகள் எழுதும்

(கண்ணன் வருகின்ற )

மடியில் தலைவைத்துக் கிடப்பேன் – கண்
மூடியே ராதைநான் நடிப்பேன் – என்
உடலோ அவன்கைகள் தேடும் – கனி
இதழோ இதழ்காண ஏங்கும் – என்னை
படிக்க நூல்போல பிரிப்பான் – அவன்
படித்த பின்னாலே சிரிப்பான்

(கண்ணன் வருகின்ற )

அவனைச் சேர்கின்ற பொழுது – என்
உயிரும் மலர்கின்ற பொழுது – ஒரு
கவலை இல்லாத இளமை – அவன்
கண்கள் என்றென்றும் புதுமை – ஒரு
உவமை இல்லாத உறவு – இனி
என்றும் கூடாது பிரிவு

(கண்ணன் வருகின்ற )


No comments:

Post a Comment